யாழில் போலி காணி உறுதி தயாரிப்பு : சந்தேகநபர் கைது!
2025ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் - வண்ணார்பண்ணை பகுதியில் 161 பரப்பு காணியை உரிமை மாற்றம் செய்வதற்கு போலி உறுதி தயாரிக்க உதவிய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த காணியானது போலி உறுதி மூலம் உரிமை மாற்றம் செய்யப்பட்டதாக காவல்துறையில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுக்கு அமைய நேற்று(20.04.2026) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அந்தவகையில் யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரின் கீழ் இயங்கும் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதி பகுதியில் வைத்து, இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
விசாரணை
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கற்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் அவரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.