ஆங்கில ஆசிரியர் போட்டி பரீட்சை பெறுபேறுகளை வெளியிட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை
ஆங்கில ஆசிரியர் போட்டி பரீட்சை பெறுபேறுகளை வெளியிட நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கோரிக்கை விடுத்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் உயர் தேசிய ஆங்கில டிப்ளோமாதாரிகளை ஆங்கில ஆசிரியர்களாக உள்ளீர்ப்பதற்கான போட்டிப் பரீட்சை கடந்த 3 வருடங்களுக்கு முன் நடைபெற்றது.
இந்த பரீட்சைப் பெறுபேறுகளை உடன் வெளியிட நடவடிக்கை எடுக்குமாறு திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆசிரியர் பற்றாக்குறை
இலங்கை ஆசிரியர் சேவை பிரமானக்குறிப்பின் படி உயர் தேசிய ஆங்கில
டிப்ளோமாதாரிகள் (எச்.என்.டி.ஈ) ஆசிரியர்களாக உள்ளீர்க்கப்பட்டு ஆசிரியர் தரம்
3.1 சீ யில் உள்வாங்கப்படுகின்றனர்.
கிழக்கு மாகாணத்தில் நிலவும் ஆங்கில ஆசிரியர் பற்றாக்குறையினை நிவர்த்திக்கும்
பொருட்டு எச்.என்.டி.ஈ தகைமையுள்ளோரிடமிருந்து கிழக்கு மாகாண பொதுச் சேவை
ஆணைக்குழுவினால் விண்ணப்பம் கோரப்பட்டு அதற்கான போட்டிப் பரீட்சையும் கடந்த 3
வருடங்களுக்கு முன் நடத்தப்பட்டது.
எனினும், இதற்கான பெறுபேறு இதுவரை வெளியிடப்படவில்லை. இதனால் இப்பரீட்சைக்குத் தோற்றியோர் பெரும் கவலையோடு உள்ளனர்.
இதனைத் தவிர ஆங்கில ஆசிரியர் பற்றாக்குறையும் இன்னும் நிவர்த்திக்கப்படாமல் உள்ளது. எனவே, இவற்றைக் கவனத்திற்கெடுத்து 3 வருடங்களுக்கு முன் நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையின் பெறுபேறுகளை வெளியிட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்குமாறு அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.