யாழில் வீட்டிலிருந்து எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம்
யாழ்ப்பாணம் (Jaffna) - அல்லைப்பிட்டி பகுதியில் படுக்கையிலேயே எரிந்த நிலையில் வயோதிபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சடலம் நேற்று முற்பகல் மீட்க்கபட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
3ஆம் வட்டாரம் அல்லைப்பிட்டி வெண்புறவியைச் சேர்ந்த 84 வயதுடைய மணியாஸ் சேவியர் என்ற வயோதிபரே இவ்வாறு எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வீட்டில் இருந்து புகை
வயோதிபர் வாழ்ந்த வீட்டில் இருந்து புகை வெளிவருவதை வீதியால் சென்ற அவரது உறவினர் அவதானித்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது குறித்த விபரீதத்தை கண்டுள்ளார்.
உடனடியாக ஊரவர்களை அழைத்து குறித்த முதியவரை மீட்க முயற்சித்துள்ளார். அனாலும் குறித்த முதியவர் தீயில் கருகி ஏற்கனவே இறந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் கிராம சேவகர் மற்றும் காவல்துறையினருக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
முதற்கட்ட விசாரணை
சம்பவ இடத்துக்கு தீவகப் பகுதி மரண விசாரணை அதிகாரி என். தியா கராசா சென்று பார்வையிட்டு சடலம் மீட்கப்பட்டு பொலிஸாரின் ஒத்துழைப் புடன் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கடந்த சில மாதங்களாக குறித்த முதியவர் நடக்க முடியாத நிலையில் தனது வீட்டில் தனிமையில் வாழ்ந்து வந்துள்ளார்.
புகை பிடிக்கும் பழக்கம் கொண்ட குறித்த முதியவர் பாவித்த பீடியின் மூலம் அவர் உறங்கும் மெத்தையில் ஏற்பட்ட தீயின் காரணமாகவே இந்த மரணம் ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக ஊர்காவற்றுறை காவல்துறையினர் தெரிவித்தனர்.