சந்தாங்கேணி ஐக்கிய மைதான நீச்சல் தடாகம் மக்கள் பாவனைக்கு!
சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட சந்தாங்கேணி ஐக்கிய விளையாட்டு மைதானத்தில் அமைந்துள்ள நீச்சல் தடாக நிர்மாணப்பணிகள் நிறைவுக்கு வந்துள்ளன.
கல்முனை பிராந்திய மக்களின் நீண்ட நாள் தேவையாக இருந்து வந்த நீச்சல் தடாக குறையினை நிவர்த்தி செய்யும் முகமாக இது ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
அதன் பூர்வாங்க நிர்மாண வேலைகளை பார்வையிடும் முகமாக சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் இன்று(09) கண்காணிப்பு விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.
மைதான நீச்சல் தடாகம்
கொரோனா, பொருளாதார நெருக்கடிகள் என பல சவால்களை கடந்து ஹரீஸின் முயற்சியின் பயனாக பல்வேறு கட்டங்களாக ஒதுக்கீடு செய்யப்பட்ட சுமார் 110 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் மூலம் அமைக்கப்பட்டுள்ள, இந்த நீச்சல் தடாகத்தை விளையாட்டுத்துறை அமைச்சிடமிருந்து கல்முனை மாநகர சபை அடுத்த வாரமளவில் கையேற்று மக்கள் பாவனைக்கு கையளிக்கும் பணிகள் துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன்போது சட்டத்தரணி ஹரீஸினால் குறித்த நீச்சல் தடாக பராமரிப்பு, மேலதிக அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராய்ந்து, மேலதிக நடவடிக்கைகள் தொடர்பில் அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்த நீச்சல் தடாகத்தின் மூலம் விளையாட்டு வீரர்களும், மாணவர்களும் நிறைவான பலனை அடைவதுடன் எதிர்காலத்தில் நீச்சல் போட்டிகள் மற்றும் பயிற்சிகளை பெற வசதியாக இருக்கும் என்றும் இந்த நீச்சல் தடாக நிர்மாண பணியானது கல்முனை மாநகர மக்களுக்கு மட்டுமல்ல ஏனைய பிரதேச மக்களுக்கும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
மேலும் இந்த விஜயத்தின் போது மாநகர சபை உத்தியோகத்தர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |


