மருதமுனையில் பேருந்து - மோட்டார் சைக்கிள் விபத்து: ஒருவர் உயிரிழப்பு
அம்பாறை - மருதமுனை பிரதான வீதியில், பெட்ரோல் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இன்று இடம்பெற்ற கோர வீதி விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கதிர்காமம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த அரசுப் பேருந்தொன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதில், மோட்டார் சைக்கிளைச் செலுத்திய நபர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்தவர் ஜெயராமன் ஜெகதீஸ்வரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தில் பணியாற்றி வந்ததுடன், மட்டக்களப்பு கல்லடி இசை மற்றும் நடனக் கல்லூரி வீதியைச் சேர்ந்தவராவார்.
திருமண உறவின் காரணமாக தற்போது பாண்டியிருப்பு பகுதியில் வசித்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்திற்கான காரணம் தொடர்பில் பெரியநீலாவணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.