பிரித்தானியாவில் முஸ்லிம் மகளிர் பாடசாலைக்கு சுமார் 15 இலட்சம் பவுண்டுகள் நிதி உதவி
பிரித்தானியாவின் போல்டன் முஸ்லிம் மகளிர் பாடசாலை (Bolton Muslim Girls’ School) தனது வளாக வசதிகளை மேம்படுத்துவதற்காக அரசிடமிருந்து சுமார் 15 இலட்சம் பவுண்டுகள் நிதியுதவியைப் பெற்றுள்ளது.
2022ஆம் ஆண்டில் பின்தங்கியிருந்த இப்பாடசாலை, தற்போது பல முக்கிய சாதனைகளை நோக்கி வியக்கத்தக்க வகையில் முன்னேறியுள்ளது.
இப்பாடசாலைக்கு உள்ளடக்கிய கல்விச் செயல்பாடுகளுக்கான IQM Centre of Excellence அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதுடன், அண்மைய Ofsted ஆய்விலும் மாணவர்களின் நடத்தை மற்றும் ஒழுக்கத்திற்காக Outstanding தரமதிப்பீடு கிடைத்துள்ளது.
மேலும், முஸ்லிம் பாடசாலைகளின் கூட்டமைப்பு (AMS) நடத்திய சமய மற்றும் ஒழுக்க விழுமியங்கள் சார்ந்த ஆய்விலும் இப்பாடசாலை மிகச்சிறந்த (Outstanding) நிலையை எட்டியுள்ளது.
பெறப்பட்ட நிதியுதவியின் மூலம் இப்பாடசாலையின் மில் (Mill) கட்டடம் நவீன வகுப்பறைகளாகவும் அலுவலகங்களாகவும் மாற்றப்படவுள்ளன.
இதன் மூலம் தற்காலிகக் கட்டடங்கள் நீக்கப்பட்டு, 11 புதிய வகுப்பறைகள் உருவாக்கப்பட்டு, இப்பாடசாலையின் மாணவர் கொள்ளளவு 750 இலிருந்து 900 ஆக உயர்த்தப்படவுள்ளது.
இந்த வரலாற்றுச் சாதனை குறித்துப் பேசிய இப்பாடசாலையின் தலைமை ஆசிரியர் இத்ரிஷ் படேல், இது மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் நிர்வாகத்தின் கூட்டு உழைப்பிற்கு கிடைத்த வெற்றி எனக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இப்பாடசாலை தங்களது தொகுதிக்குப் பெருமை சேர்ப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் யாஸ்மின் குரேஷியும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.