ஊழல்களற்ற மட்டக்களப்பு மாநகரசபை : தூய்மைப்படுத்தும் திட்டம்
மட்டக்களப்பு மாநகரசபையினை இலஞ்ச ஊழல்கள் அற்றதும் குப்பைகூழங்கள் அற்றதுமான தூய்மையான மாநகரசபையாக மாற்றும் வகையிலான விசேட வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இது இலங்கை அரசாங்கம், நாட்டினை தூய்மைப்படுத்தும் முகமாக ஆரம்பித்துள்ள கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்திற்கு இணைவாக மட்டக்களப்பு மாநகரசபை இந்த வேலைத்திட்டத்தினை முன்னெடுத்துள்ளது.
தூய்மையான மாநகரசபை
இதன்படி, மாநகரசபையின் ஆணையாளர் என்.தனஞ்செயனின் எண்ணக்கருவில் மட்டக்களப்பு மாநகரசபைக்குள் இலஞ்சஊழல் என்பனவற்றினை தடுக்கும் வகையிலும் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்தும், இதன்போது இலஞ்சம், ஊழல், தரகுப்பணம் பெறாத அலுவலக வளாகத்தினுள் நுழைகின்றீர்கள், சட்டரீதியற்ற பணப்பரிமாற்றம் தடைசெய்யப்படுகின்றது எனும் பதாகை காட்சிப்படுத்தப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இலஞ்சம் வாங்குவதும் குற்றம், கொடுப்பதும் குற்றம் போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட முறைப்பாட்டு இலக்கம் கொண்ட பதாகை திறந்துவைக்கப்பட்டதுடன் ஆங்கில மொழிப்பதாகை நடப்பட்டது.
இணையத்தளம்
அதனை தொடர்ந்து மாநகரசபையின் சேவைகளை அறிந்துகொள்ளவும் அதன் சேவைகளைப்பெற்றுக்கொள்ளவும் மாநகரம் தொடர்பான தகவல்களைப்பெற்றுக்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்ட இணையத்தளம் இதன்போது அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.
அத்துடன் பொதுமக்கள் கழிவுகளை வீதிகளில் எறிவதை தடுக்குமும் வகையிலும் அவ்வாறானவர்களை கண்டுபிடிப்பதற்காக மொபைல் சிசிடிவி கேமரா பொருத்தும் செயற்பாட்டுக்கு அமைவாக திருமலை வீதியில் சத்ருகொண்டானில் பொருத்தப்பட்டு ஆரம்பித்துவைக்கப்பட்டது.
மேலும், இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளரும் கிரான் பிரதேச செயலாளருமான சட்டத்தரணி க.சித்திரவேல் கலந்துகொண்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |