அதிரடி சுற்றிவளைப்பில் கைதான அரச ஊழியர்! சிவில் உடையில் பொலிஸார் நடவடிக்கை
செங்கலடி பிரதேசத்தில் விவசாயி ஒருவரிடம் 50 ஆயிரம் ரூபா பணத்தை இலஞ்சமாக பெற்றுக் கொண்ட கமநல அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர் ஒருவர் இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவிவினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த உத்தியோகத்தர் சிவில் உடையில் இருந்த பொலிஸாரால் இன்று (05) பகல் செங்கலடி பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 34 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலஞ்ச ஊழல்...
சித்தாண்டி பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் வயலுக்கு உரம் பெற்று தருவதாகவும், மழை வெள்ளத்தால் வேளாண்மை சேதமடைந்ததற்கு நட்டஈடு பெற்று தருவதாகவும் அதற்கு 50 ஆயிரம் ரூபா பணத்தை இலஞ்சமாக கொடுக்குமாறு கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் கோரியுள்ளார்.
இதனையடுத்து குறித்த விவசாயி கொழும்பிலுள்ள (Colombo) இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினரிடம் முறைப்பாடளித்துள்ளார்.
இந்நிலையில், இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினரின் ஆலோசனைக்கமைய, இன்று பகல் செங்கலடி பகுதியிலுள்ள வங்கி ஒன்றிற்கு அருகாமையில் கொழும்பில் இருந்து வந்த இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினர் கண்காணித்துக் கொண்டிருந்த நிலையில்,
விவசாயி கமநல அபிவிருத்தி உத்தியோகத்தரிடம் 50 ஆயிரம் ரூபாவை இலஞ்சமாக கொடுத்துள்ளார்.
அங்கு சிவில் உடையில் இருந்த இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினர் குறித்த உத்தியோகத்தரை சுற்றிவளைத்து கைது செய்ததுடன் இலஞ்சமாக பெற்றுக் கொண்ட 50 ஆயிரம் ரூபாவையும் மீட்டுள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி கொழும்புக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கையை இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |