மாவடிப்பள்ளி அல்-அஷ்ரப் பாடசாலையில் மாணவர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கை!
கல்முனை ரஹ்மத் பவுண்டேஷனின் ஏற்பாட்டில் மாவடிப்பள்ளி அல்-அஷ்ரப் பாடசாலையில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அமைக்கப்பட்ட வுழு செய்யும் நீர் தொகுதி செவ்வாய்க்கிழமை (21) திறந்து வைக்கப்பட்டது.
பாடசாலையின் அதிபர் ரஜாப்தீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக கல்முனை மாநகர சபை முன்னாள் பிரதி முதல்வர் கல்முனை ரஹ்மத் பவுண்டேஷனின் ஸ்தாபகத் தலைவருமான ரஹ்மத் மன்சூர் கலந்து கொண்டு, மாணவர்களின் பயன்பாட்டிற்காக இந்நீர் வசதியை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.
முக்கிய முயற்சி
மாணவர்கள் தங்களின் தினசரி தொழுகைகளுக்கான வுழுவை சுத்தமாகவும் எளிதாகவும் மேற்கொள்ளும் வகையில் இவ்வமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், பாடசாலை சூழலில் சுகாதார பழக்கவழக்கங்களை மேம்படுத்தும் முக்கிய முயற்சியாகவும் இது விளங்குகிறது.

கல்வியுடன் கூடிய ஒழுக்கமும் ஆன்மீக வளர்ச்சியும் மாணவர்களிடையே வலுப்பெற இந்தத் திட்டம் பெரும் பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிகழ்வில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ரனீஸ், பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள், பொது மக்கள் மற்றும் ரஹ்மத் பவுண்டேஷனின் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.






