காசா யுத்தத்தின் இரண்டு வருட நினைவு; மட்டக்களப்பில் பெண்கள் கவனயீர்ப்பு நடைபயணம்
காசா யுத்தத்தின் இரண்டு வருட நினைவு நாளை முன்னிட்டு இன அழிப்புக்கு நியாயம் கோரியும் தனி நாடாக பிரகடனப்படுத்தக் கோரியும் மட்டக்களப்பில், பெண்கள் கவனயீர்ப்பு நடைபயணமொன்றை மேற்கொண்டனர்.
யுத்தம் நடைபெற்று இரண்டு வருடங்கள் நிறைவடைந்த நிலையிலேயே 07.10.2025 அன்று "பெண்கள் நியாய பயணம் அமைப்பு" இந்த கவனயீர்ப்பு நடைபயணத்தை மேற்கொண்டுள்ளனர்.
கல்லடி பாலத்துக்கு அருகில் உள்ள செபஸ்தியார் ஆலயத்தில் இருந்து காந்தி பூங்கா வரை இந்த கவனயீர்ப்பு நடைபயணத்தை மேற்கொண்டனர்.
மழலைகள் பலியாகக் கூடாது
"நீதி நியாயம் கோரி தொடர்ந்து 1245 வது நாள் நியாய பயணம்" என்ற தொனிப்பொருளில் அநீதிகள் படுகொலைகளுக்கு எதிரான சுலோகங்கள் ஏந்தியவாறு பெண்கள் அமைப்பு நடைபயணத்தை மேற்கொண்டது.
அத்தோடு, 77 வருடங்களாக பலஸ்தீனம் உன்னை புதைக்க முயற்சித்துள்ளனர்,மீண்டும் மீண்டும் நீ சாம்பலில் இருந்து பீனிக்ஸ் பறவையாய் எழுவாயாக, உப்பில்லா உணவு போல பலஸ்தீனம் இல்லாத நாடு முழுமை அற்றதாகவும்,சுவையற்றதாகும் இருக்கும், மற்றும் ஆற்றில் இருந்து கடல் வரை பலஸ்தீனம் விடுதலையாகும் என சுலோகங்களை கழுத்தில் தொங்க விட்டவாறே நடைபயணத்தை மேற்கொண்டுள்ளனர்.
அதனை தொடர்ந்து, அங்குள்ள காந்தி சிலையை பலஸ்தீன அடையாளம்கொண்ட துணியால் போர்த்தியதுடன் தலைக்கு மேல் குடை ஒன்றை வைத்த பின்னர் "யுத்தத்தின் வேதனை அறிந்தவர்கள் நாம். இந்த வேதனை எங்கும் தொடரக்கூடாது, நாளைய மழலைகள் பலியாகக் கூடாது என்பதே எமது வேண்டுதல்."என குரல் எழுப்பிய பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |



