மதுபோதையில் வாகனம் செலுத்திய இலங்கை போக்குவரத்து சபை பேருந்து ஓட்டுநர் கைது.
பயணிகளை ஏற்றிக்கொண்டு இலங்கை போக்குவரத்து சபை பேருந்தினை மதுபோதையுடன் செலுத்திய சாரதி கடபொல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நுவரெலியாவிலிருந்து உடுப்புஸ்ஸல்லாவவுக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபை பேருந்து ஓட்டுநர் மதுபோதையில் வாகனம் ஓட்டுவதாக பேருந்தில் பயணித்த ஒருவர் 119 பொலிஸ் அவசர பிரிவுக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில், கடபொல பொலிஸார் பேருந்தை நிறுத்தி சாரதியை சோதனை செய்தனர்.
சாரதி மதுபோதையில் இருந்ததை உறுதி செய்த பின்னர், கடபொல பொலிஸார் சாரதியைக் கைது செய்து பேருந்தை பொலிஸார் தமது கட்டுப்பாட்டுக்குள் எடுத்துள்ளனர்.
பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட பேருந்து, வேறொரு ஓட்டுநரை பயன்படுத்தி நுவரெலியா இலங்கை போக்குவரத்து சபை டிப்போவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சந்தேகநபர் விசாரணைகளின் பின்னர் பொலிஸ் பிணையில் செல்ல அனுமத்திக்கப்பட்டுள்ளதாக , நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கடபொல பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும், சந்தேகநபரான ஓட்டுநர் முன்னர் குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக நீதிமன்றத்தில் தண்டிக்கப்பட்டவர் என்றும், கூடுதலாக, நுவரெலியா டிப்போவால் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் நுவரெலியா டிப்போவின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.