இலங்கைக்கான ஈரான் தூதுவர் வெளியிட்ட தகவல்!
இலங்கைக்கும் ஈரானுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் வரி தொடர்பான எச்சரிக்கைகளை தாங்கும் அளவுக்கு வலிமையானவை என இலங்கைக்கான ஈரான் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஈரானுடன் வர்த்தகத் தொடர்புகளை பேணுகின்ற எந்தவொரு நாடும், அமெரிக்காவுடன் செய்யும் வர்த்தகத்திற்கு 25 சதவீத கூடுதல் வரியைச் (Tariff) செலுத்த நேரிடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்தார்.
இது குறித்து கருத்துரைத்துள்ள ஈரானிய தூதுவர், இந்த விடயத்தில் இலங்கை அரசாங்கமே முடிவெடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
பாதிப்புகள்
இலங்கை தேயிலையின் முக்கிய கொள்வனவாளராக ஈரான் தொடர்ந்தும் இருக்கும் என்று தூதுவர் உறுதியளித்துள்ளார்.

இதேவேளை, முன்னணி பொருளாதார அறிஞர் ரோஹன் சமரஜீவ, இந்த வரி விதிப்பால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து கவலை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்கா இலங்கையின் மிகப்பெரிய ஏற்றுமதி சந்தையாகும். ஆண்டுக்கு சுமார் 3 பில்லியன் டொலர் அளவில் வர்த்தகம் இடம்பெறுகிறது.
இந்த நிலையில், ஈரானுடன் வர்த்தகம் செய்வதன் காரணமாக, அமெரிக்காவின் இந்த 25% வரி விதிக்கப்பட்டால், இலங்கையின் ஏற்றுமதித் துறை பாரிய வீழ்ச்சியைச் சந்திக்கும்.
அத்துடன், ஈரானிடமிருந்து உரம் போன்ற பொருட்களை வாங்குவது கடினமாகும் அல்லது அதன் விலை அதிகரிக்கும். இது இலங்கையின் விவசாயத் துறையை பாதிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.