குர் ஆன் ஓதுதல்
எவர் ஒருவர் இறைவேதத்தில் இருந்து ஒரு எழுத்தை வாசிக்கிறாரோ அவருக்கு அதனால் ஒரு நன்மை கிடைக்கும். ஒரு நன்மைக்கு அதுபோன்று பத்து மடங்கு நன்மை கிடைக்கும். அலிப் லாம் மீம் ஒரு எழுத்து என கூறமாட்டேன், இதில் அலிப் ஒரு எழுத்து, லாம் ஒரு எழுத்து, மீம் ஒரு எழுத்து ஆகும் இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
குர்ஆன் ஓதப்படும் போது அதை செவிமடுங்கள், வாய் மூடுங்கள், நீங்கள் அருள் செய்ப்படுவீர்கள் (திருக்குர்ஆன் 7:204)
ஒருவர் குர் ஆனை வாசித்தாலோ, அல்லது ஒருவர் வாசிப்பதை செவிமடுத்தாலோ அத்தகைய இருவருக்கும் இறைநம்பிக்கை மேலும் அதிகரிக்கும்.
”எவர் இறைவேதமாகிய திருக்குர்ஆனிலிருந்து ஒரு வசனத்தை செவி மடுக்கிறாரோ அவருக்கு பன்மடங்கு நன்மை எழுதப்படுகிறது. எவர் திருக்குர்ஆனை வாசிக்கிறாரோ அது அவருக்கு மறுமையில் ஒளிமயமாக ஆகிவிடுகிறது என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹூரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
”நம்பிக்கை கொண்டோர் யாரெனில் இறைவனைப் பற்றிக்கூறப்பட்டால் அவர்களின் உள்ளங்கள் நடுங்கும். அவனது வசனங்கள் அவர்களுக்கு வாசித்துக் காட்டப்பட்டால் அது அவர்களின் நம்பிக்கையை அதிகப்படுத்தும். அவர்கள் தமது இறைவனையே சார்ந்திருப்பார்கள் (குர் ஆன் 8:2)
குர் ஆனை கவனியுங்கள்
ஹஜ்ரத் அபூமூஸா ரலியல்லாஹீ அன்ஹீ அவர்கள் அறிவிக்கிறார்கள். குர் ஆனை நன்றாக கவனித்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். என்னுயிர் எவன் வசத்தில் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக குர் ஆனாகிறது ஒட்டகம் தன் பிடிகயிற்றுடன் ஓடிவிடுவதை விடவும் விரைவாக நெஞ்சை விட்டும் நீங்கக் கூடியதாகும்.
குர் ஆனை மனனம் செய்து அது நினைவில் நிற்பது குர் ஆனுடைய பகிரங்கமான அற்புதமாகும். இல்லையானால் அது பாதி அளவுள்ள வேறொரு புத்தகத்தை பாடமிடுவது சிரமம் என்பது மட்டுமல்ல. அது முடியாத செயலுமாகும். இதனால் தான் குர் ஆன் மனனமாகிவிடுவது தனது பெரும் பேருபகாரமென சூரா கமர் என்ற அத்தியாயத்தில் அல்லாஹ் அடிக்கடி எடுத்துரைக்கிறான்.
குர்ஆனை மனனம் செய்வதற்கு எளிதாக்கி வைத்துள்ளோம். மனனம் செய்பவர் எவரேனும் உண்டா? (54:17)
என்பதாக கூறுகிறான்.
எனக்கு என் உம்மத்தினரின் பாவங்கள் எடுத்துக் காட்டப்பட்டன. அவற்றில் குர் ஆனை ஓதி மறந்து விடுவதைவிட பெரிய பாவம் எதனையும் நான் காணவில்லை என நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள்.
மற்றோர் இடத்தில், எந்த மனிதர் குர் ஆனை ஓதி மறந்து விடுகிறாரோ அவர் கியாமத்து நாளில் தொழு நோயுள்ளவராக அல்லாஹ்வின் சமூகத்திற்கு வருவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.