நீதி அமைச்சர் விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை
குற்றவாளிகளுடன் தொடர்புடைய அரசியல்வாதிகளும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தேசிய மக்கள் சக்தி ஆட்சியில், நாட்டில் சட்டத்தின் ஆட்சி உறுதியாக நிலைநிறுத்தப்படும். குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எவ்வித தளர்வும் வழங்கப்படமாட்டாது.
பாதாள உலகக் குழுக்களுக்கும் போதைப்பொருள் வர்த்தகர்களுக்கும் அடியோடு முடிவு கட்டப்படும்.
நீதி அமைச்சின் கீழ் செயற்படும் சட்ட அமுலாக்க அமைப்புகள் மேலும் பலப்படுத்தப்படவுள்ளதுடன், குற்றவாளிகளைப் பாதுகாக்கும் எந்தவொரு சக்தியும் இனி செயற்பட முடியாத நிலை உருவாக்கப்படும்.
பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்தால் சமூகத்தில் ஏற்படும் தீமைகளை முழுமையாக ஒழிப்பதே அரசின் பிரதான இலக்காகும்.
மேலும் குற்றவாளிகளுடன் தொடர்புடைய அரசியல்வாதிகளும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது.
அரசியல் அதிகாரம், செல்வாக்கு அல்லது பதவி ஆகியவற்றை காரணமாகக் கொண்டு எவரும் சட்டத்திலிருந்து தப்ப முடியாது என்றும் அவர் எச்சரித்தார்.
தேசிய மக்கள் சக்தி அரசு, ஊழல், குற்றச்செயல்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று மீண்டும் வலியுறுத்திய நீதி அமைச்சர், மக்களின் பாதுகாப்பும் நியாயமும்தான் அரசின் முதன்மை நோக்கம் என்றும் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கைகள் மூலம் நாட்டில் நம்பிக்கையுடனான சமூக சூழல் உருவாகும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.