NPP அரசை கடுமையாக சாடும் சீ.வீ.கே. சிவஞானம்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தாம் அரசியல் செய்வதற்காக எமது கட்சியான இலங்கை தமிழ் அரசுக் கட்சியை விமர்சனம் செய்வதை ஒருபோதும் ஏற்க முடியாது. எமது கட்சி விடயங்களை நாங்கள் பார்த்துக் கொள்வோம் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் தெரிவித்தார்.
யாழ் கல்வியங்காட்டிலுள்ள அவரது அலுவலகத்தில் இன்று நடாத்திய ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தார்.
அரச நிதி
அந்த கூட்டங்கள் தொடர்பில் எமது கட்சிக்கோ ஏனைய தமிழ் தேசிய கட்சிகளுக்கோ மக்கள் பிரதிநிதிகளுக்கோ உரிய முறையில் அழைப்புக்களும் விடப்படவில்லை.

அதேநேரம் அழைத்த சில கூட்டங்களுக்கு உரிய அங்கீகாரமும் வழங்கப்படவில்லை. வெறுமனே அரச நிதியில் என்பிபி அல்லது ஜேவிபி கட்சியினர் மட்டுமே அந்த நிகழ்வுகளில் பங்கெடுத்து ஷோ காட்டி இருக்கின்றனர்.
எனவே அரச நிதியில் தேசிய மக்கள் சக்தியினர் சோ காட்டுவதனை ஏற்றுக் கொள்ள முடியாது.
மேலும் என்பிபியினர் வடக்கிற்கு வந்து சோ அதாவது படம் காட்டுவதை நிறுத்த வேண்டும். இந்த விடயங்களை ஜனாதிபதி கவனத்தில் எடுத்து எதிர்காலத்திலெடுத்து செயற்பட வேண்டும்.
தலையிட அவசியமோ இல்லை
இந்த அரசாங்கம் தாம் அரசியல் செய்வதற்காக எமது கட்சியை விமர்சனம் செய்வதை ஒருபோதும் ஏற்க முடியாது. எமது கட்சி விடயங்களை நாங்கள் பார்த்துக் கொள்வோம்.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்களான சிறீதரன் சுமந்திரன் தொடர்பில் விமர்சிப்பதோ கட்சியின் உள்வீட்டு விவகாரங்களில் தேசிய மக்கள் சக்தி தலையிட வேண்டிய அவசியமோ இல்லை.
அதேபோன்று இந்த விவகாரத்தில் அனுர தரப்பு குத்தி முறியவும் தேவையில்லை.
மக்கள் மத்தியில் தமிழ் அரசுக் கட்சியை
மலினப்படுத்தும் அவர்களின் கனவும் ஒருபோதும் பலிக்காது - என்றார்.