ஆரோக்கியம் ஒரு அருட்கொடை
ஹசன் அல்பஸ் ரீ(ரஹ்) அவர்கள் கூறியுள்ளதாவது, அபூபக்ர்(ரளி) அவர்கள் மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள்.
”மக்களே! இவ்வுலகில்(ஏகத்துவ) உறுதி, உடல்நலம் ஆகியவற்றை விட சிறந்த வேறெதுவும் மக்களுக்கு வழங்கப்படவில்லை. ஆகவே வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்விடம் நீங்கள் அந்த இரண்டையும் கேளுங்கள்” என அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆக மேற்கொண்ட நபிமொழியை கூர்ந்து கவனிக்கின்றபோது, நபி(ஸல்) அவர்கள் இம்மை, மறுமையின் நற்சுகத்தை ஒருங்கிணைத்துள்ளார்கள் என்பதை அறிகிறோம்.
மேலும் ஓர் அடியானின் ஈருலக நற்சுகம் என்பது ஏகத்துவ உறுதி, உடல்நலம் ஆகியவை இல்லாமல் முழுமையடைவதில்லை.
ஏகத்துவ உறுதி என்பது மறுமையின் தண்டனைகளைவிட்டு அவனை தடுத்துவிடுகின்றது.
உடல்நலமானது உலகில் வாழும்போது அவனது உடலிலும் உள்ளத்திலும் நோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது.

ரிஃபாஆ பின் ராஃபிஉ அல் அன்ஸாரீ(ரளி) அவர்கள் கூறியதாவது, அபூபக்ர் அஸ்ஸித்தீக்(ரளி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களுடைய சொற்பொழிவு மேடை(மிம்பர்) மீதிருந்தபடி, அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறியதை கேட்டேன் என்று சொற்பொழிவை துவக்கினார்கள்.
நபி(ஸல்) அவர்களை நினைவு கூர்ந்ததும் அபூபக்ர்(ரளி) அவர்கள் அழுதார்கள்! பின்னர் அமைதியானார்கள்!!
பிறகு, நபி(ஸல்) அவர்கள் (மதீனாவுக்கு வந்த) முதலாம் ஆண்டில், இதேபோன்ற ஒரு கோடைக் காலத்தில், ”அல்லாஹ்விடம் இம்மை- மறுமை ஆகிய இரண்டிலும், மன்னிப்பையும் உடல் நலத்தையும் மன உறுதியையும் கேளுங்கள்” என்று கூறியதை கேட்டேன் எனக் கூறினார்கள்.
இதன் மூலம் தெரியவருவதாவது, அல்லாஹ்வுடைய மன்னிப்பு கிடைப்பதன் மூலம் கடந்தகாலத் தீங்குகள் நீக்கப்படுகின்றன.
உடல் நலத்தின் மூலம் நிகழ்காலத் தீங்குகள் அகற்றப்படுகின்றன. இறைநம்பிக்கையில் உறுதியாக இருப்பதன் மூலம் மறுமையின் வெற்றி கிடைப்பதோடு நிரந்தரமான நற்சுகமும் கிடைக்கிறது.