திருகோணமலையில் தொடரும் யானைகளின் அட்டகாசம்!
திருகோணமலை - வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கிராமங்களில் யானைகளின் அட்டகாசம் அதிகரித்து வருவதாக தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் திருகோணமலை மாவட்டச் செயலாளர் சின்ன மோகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில், இன்று(30.01.2026) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
காட்டு யானைகள்
அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த சில தினங்களாக உப்பூறல் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட பயன் தரும் தென்னைமரங்களையும், ஆறுக்கும் மேற்பட்ட வீடுகளையும் காட்டு யானைகள் சேதப்படுத்தியுள்ளது.

அத்துடன், வீட்டிலிருக்கும் வீட்டு உபகரணங்களையும் காட்டு யானைகள் சேதப்படுத்தியுள்ளன. யானைகளால் சேதமாக்கப்பட்ட வீடுகளுக்கு இதுவரையும் அரசாங்கத்தினால் நஷ்டஈடுகள் கூட வழங்கப்படவில்லை.
எனவே, நிரந்தர தீர்வாக யானை வேலிகள் அமைக்கப்படவேண்டும், மக்கள் என்ன செய்வதென்று தெரியாமல் அச்சத்தில் வாழ்கின்றனர். பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் இந்த விடயத்தில் உடன் கவனம் எடுத்து நிரந்தர தீர்வைப் பெற்று கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.