ஏறாவூரில் போதைப் பொருள் வியாபாரம்: பெண் வியாபாரி கைது
ஏறாவூர் பிரதேசத்தில் போதைப் பொருள் வியாபார விற்பனை நிலையமாக செயற்பட்டு வந்த வீடு ஒன்றை நேற்று(26.10.2025) முற்றுகையிட்ட பொலிசார் பெண் வியாபாரி ஒருவரை கைது செய்துள்ளனர்.
அத்துடன் 5350 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருள் மற்றும் அவரிடம் இருந்து 3இலட்சத்து 61ஆயிரம் ரூபா பணத்தையும் மீட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
56 வயதுடைய பெண் வியாபாரி
மட்டக்களப்பு புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினை அடுத்து, ஏறாவூர் பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் சம்பவ தினமான நேற்று பிற்பகல் குறித்த பிரதேசத்திலுள்ள ஏறாவூர் முதலாம் பிரிவு, கலைமகள் பாடசாலை வீதியில் உள்ள போதைப் பொருள் விற்பனை செய்து வந்த வீட்டை முற்றுகையிட்டனர்.

இதன்போது அங்கு வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த 56 வயதுடைய பெண் வியாபாரியை 5350 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண் நீண்டகாலமாக போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாவும், அவரை இன்று (27.10.2025) நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |