கிழக்கு மாகாண வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம்!

Sri Lankan Tamils Sri Lanka Government Eastern Province Doctors Protest
By Fathima Jan 23, 2026 10:29 AM GMT

சுகாதார அமைச்சினால் ஏற்கனவே இணக்கம் காணப்பட்ட தீர்வுகளை நடைமுறைப்படுத்த தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தினால் கிழக்கு மாகாணம் உட்பட நாடு தழுவிய ரீதியில் சுகாதார சேவைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன. ​

கிண்ணியா தள வைத்தியசாலையிலும் இன்று(23.01.2026) காலை முதல் வைத்தியர்கள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில் வைத்தியர்கள் முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை நேற்று(22.01.2026) முதல் நிறைவுக்கு வந்ததாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்தது.

இது தொடர்பில் அந்தச் சங்கம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை

குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருந்த அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரை உடனடியாக அந்தப் பதவியில் இருந்து நீக்குவதற்கான கடிதத்தை சுகாதார அமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ளார்.

கிழக்கு மாகாண வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம்! | Doctors Strike In The Eastern Province

இதனைத் தொடர்ந்து, கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்த வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்புப் போராட்டம் இன்று(22) நண்பகல் 2 மணியுடன் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது.

அத்துடன் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகராக டாக்டர் ஏ.பி.மசூத் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனம் உடன் நடைமுறைக்கு வரும் வகையில், சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜயசிங்கவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், சுகாதார அமைச்சின் மந்தகதியிலான செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று காலை 8.00 மணி முதல் நாடு தழுவிய ரீதியில் 48 மணிநேர அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.​