மட்டக்களப்பில் அபாய நிலையில் காணப்படும் வடிச்சல் குழாய்! பொதுமக்களால் விடுக்கப்பட்ட கோரிக்கை
மட்டக்களப்பு - கோட்டை கல்லாறு பாலத்தின் வடிச்சல் குழாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்பினை சீரமைத்து தருமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட கமக்கார சங்கங்களின் சம்மேளன செயலாளர் நிரஞ்சன், "கோட்டை கல்லாறு பாலத்தின் வடிச்சல் குழாய்கள் மணலால் மற்றும் புற்களால் அடைபட்டுள்ளதால் மழை காலத்தில் வெள்ள நீர் கடலுக்குள் வழிந்தோட முடியாததையடுத்து மட்டக்களப்பு மற்றும் குடிமனைகள் வயல் நிலங்கள் வெள்ள நீரில் மூழ்கி பாதிக்கப்படவுள்ளன.
எனவே, அடைப்பட்டுள்ள இந்த பாலத்தின் வடிச்சல் குழாய்களை சீர் செய்து விவசாயிகளையும் மக்களையும் இந்த அழிவில் இருந்து உரிய அதிகாரிகள் காப்பாற்ற வேண்டும்.
முன்வைக்கப்பட்ட கோரிக்கை
அம்பாறை மாவட்திலுள்ள மழைவெள்ள நீர்கள், மற்றும் இக்கினியாகலை குளத்தின் மேலதிக நீர், மண்டூர், வெல்லாவெளி பிரதேசங்களில் இருந்து வரும் வெள்ள நீர் இந்த பாலத்தின் ஊடாக வடிந்து கடலுக்கு செல்லும்.
இவ்வாறான நிலையில் கடந்த 2004 சுனாமி அனர்த்தினால் முற்றாக பாதிக்கப்பட்டு இந்த பாலத்தை ஜப்பான் மக்களால் நன்கொடையாக வழங்கப்பட்டு நிதியினை கொண்டு இந்த பாலம் அமைக்கப்பட்டு பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிலையில் குறித்த பாலத்தில் 20க்கு மேற்பட்ட வடிச்சல் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில் 10க்கு மேற்பட்ட வடிச்சல் குழாய்கள் மணல் மற்றும் புற்களால் முற்றாக அடைக்கப்பட்டுள்ளதால் இதனூடாக கடலுக்கு நீர்வடிந்தோட முடியாததையடுத்து வயல் நிலங்கள் மற்றும் மட்டக்களப்பு மற்றம் ஏனைய குடியிருப்புக்கள் வெள்ளத்தினால் மூழ்கி பாதிக்கப்படுகின்றன.
முன்னெச்சரிக்கை...
இதனால் விவசாயிகளுக்கு பல இலட்சம் ரூபா நட்டம் ஏற்படுகின்றதுடன் மக்கள் துன்பங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
பாலத்தின் வடிச்சல் பகுதி அடைக்கப்பட்டது தொடர்பாக சம்மந்தபட்ட அதிகாரிகளுக்கு கடந்த இரண்டு மூன்று வருடங்களாக தெரிவித்த போது எவரும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையையும் எடுக்கப்படவில்லை.
அதேவேளை இந்த பாலத்துக்கு பொறுப்பான திணைக்களம் இந்த பாலத்தை பராமரிக்காததால் ஆலைமரம் மற்றும் அரச மரம் பாலத்தில் வளர்ந்து வருவதால் பாலத்தில் வெடிப்பு ஏற்பட்டுவருகின்றது.
அதேவேளை, இந்த பிரதான பாலத்தின் ஊடாக பல அரசியல்வாதிகள், அதிகாரிகள் உட்பட உரியதரப்பினர் பிரயாணம் செய்கின்றனர் அவர்களும் இதனை கவனிப்பதாக இல்லை.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக கவனம் எடுத்து இங்குள்ள இயந்திரங்களை பாவித்து இதனை உரிய அதிகாரிகள் சீர் செய்து வரும் வெள்ள அனர்த்த அழிவில் இருந்து விவசாயிகளையும் மக்களையும் காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |